உக்ரைன் தாக்குதல்களால் தனது சொந்த சுத்திகரிப்புத் திறனில் பெரும் பகுதியை இழந்த ரஷ்யா பெட்ரோலுக்காக இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களை நாடி வருகிறது. நீண்ட காலமாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெயை விநியோகித்து வரும் ரஷ்யா, தனது கூடுதல் பெட்ரோல் தேவைக்காக இந்தியாவை நாடும் அளவுக்குச் சுத்திகரிப்புத் துறையில் இந்தியா வளர்ந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
எண்ணெய் சுத்திகரிப்பு திறனில் உலகின் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. அமெரிக்கா ஒரு நாளைக்கு 19 மில்லியன் பேரல்கள் என்ற அளவில் அதிகபட்ச எண்ணெயைச் சுத்திகரிக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் ஒரு நாளைக்கு சுமார் 17 மில்லியன் பேரல்கள் சுத்திகரிப்புத் திறனுடன் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஆரம்பத்தில் இந்தியாவின் சுத்திகரிப்புத்துறை உள்நாட்டுப் பற்றாக்குறைகளைப் பூர்த்தி செய்வதையே நோக்கமாகக் கொண்டிருந்தது. நாட்டில் கொண்டுவரப்பட்ட தாராளமயமாக்கல் கொள்கையும் ரிலையன்ஸ் போன்ற பெரிய சுத்திகரிப்பு நிலையங்களுமே ஏற்றுமதிக்கு உதவியாக அமைந்தன.
தனது எண்ணெய் தேவையில் 90 சதவீதத்துக்கும் மேல் இறக்குமதியைச் சார்ந்திருக்கும் இந்தியாவில் 19 பொதுத்துறை சுத்திகரிப்பு நிலையங்கள், மூன்று தனியார் துறை சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் ஒரு கூட்டு முயற்சி சுத்திகரிப்பு நிலையம் என மொத்தம் 23 சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன.
இதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் 5.6 மில்லியன் பேரல்கள் என்ற கணக்கில் ஆண்டுக்கு சுமார் 258 மில்லியன் டன்களுக்கும் மேல் சுத்திகரிக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது.
இதில் குஜராத்தில் உள்ள ஜாம் நகர் ரிலையன்ஸ் சுத்திகரிப்பு நிலையமே ஒரு நாளைக்கு 1.24 மில்லியன் பேரல் எண்ணெய் சுத்திகரிக்கும் திறன் கொண்டதாக, உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமாக அமைந்துள்ளது.
ஜாம்நகரில் ஒரே இடத்தில் இரண்டு சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. இதில் முதல் சுத்திகரிப்பு நிலையத்தின் மொத்தத் திறன் ஒரு நாளைக்கு சுமார் 6,60,000 பேரல்கள் ஆகும். இது உள்நாட்டு பயன்பாட்டுக்கான எரிபொருளை வழங்குகிறது.
இரண்டாவது சுத்திகரிப்பு நிலையத்தின் கொள்ளளவு ஒரு நாளைக்கு சுமார் 5,80,000 பேரல்கள் ஆகும். இங்கு தயாரிக்கப்படும் பொருட்கள் பெரும்பாலும் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆசியா மற்றும் மேற்கு ஆசியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
நாட்டின் மொத்த சுத்திகரிப்புத் திறனில் சுமார் 40 சதவீதத்தை ரிலையன்ஸ் , நயாரா மற்றும் HBCL ஆகிய நிறுவனங்களே வைத்துள்ளன.
ஈரான் போரால் உருவான எரிசக்தி நெருக்கடியின் தாக்கத்தைக் குறைப்பதற்கு நாட்டின் சுத்திகரிப்பு நிலையங்களே உதவியுள்ளன. கணிசமான ஏற்றுமதி உபரியைப் பராமரிப்பதோடு உள்நாட்டுச் சந்தைக்கும் போதுமான அளவு உற்பத்தியை உறுதி செய்யும் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் முழுமையான பயன்பாட்டு நிலைகளிலும் முன்னணியில் உள்ளன.
நாட்டின் பெட்ரோலியம், மற்றும் அது சார்ந்த எண்ணெய் பொருட்களின் நுகர்வு, 1999-ல் 90.6 மில்லியன் டன்களிலிருந்து 2026-ல் 243.2 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது. இது, சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு வெளிநாட்டு விற்பனையை அதிகரித்ததுடன் பெரிய உள்நாட்டுச் சந்தையையும் உருவாக்கியதைக் காட்டுகிறது.
ஒரு நாளைக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பேரல்கள் என்ற கணக்கில் 2024-25 நிதியாண்டில் சுமார் 64.7 மில்லியன் டன் பெட்ரோலியப் பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. 2025-ஆம் ஆண்டில் இந்தியாவின் எரிபொருள் ஏற்றுமதி ஒரு நாளைக்கு 1.28 மில்லியன் பேரல்கள் என்ற சாதனை அளவை எட்டும் என மதிப்பிடப் பட்டுள்ளது.
நாட்டின் சுத்திகரிப்பு விரிவாக்கம் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியிருந்தாலும் 2022-ல் உக்ரைன் போருக்குப் பின் மலிவு விலையில் ரஷ்ய கச்சா எண்ணெய் கிடைக்கத் தொடங்கியதும் ஏற்றுமதிச் சந்தையில் இந்தியாவின் போட்டித்திறன் அதிகரிக்கத் தொடங்கியது.
ஒரு சுத்திகரிப்பு ஆலைக்கு முக்கிய உள்ளீட்டுச் செலவான கச்சா எண்ணெய் குறைந்த விலை மூலப்பொருளாக கிடைத்ததால் இந்தியாவில் சுத்திகரிக்கப் பட்ட பெட்ரோலியப் பொருட்களை சர்வதேச சந்தைகளில் மேலும் போட்டித்தன்மை வாய்ந்த விலை கிடைக்கிறது.
2030-க்குள் தனது சுத்திகரிப்புத் திறனை ஆண்டுக்கு 309.5 மில்லியன் டன்களாக அதிகரிக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. முக்கியமாக 17,825 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டத்தின் மூலம் இந்தியன் ஆயில் நிறுவனம் தனது குஜராத் சுத்திகரிப்பு ஆலையின் திறனை ஒரு நாளைக்கு 2,74,000 பேரல்களிலிருந்து 3,60,000 பேரல்களாக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், உக்ரைன் தாக்குதல்களால் தனது சொந்த சுத்திகரிப்புத் திறனில் பெரும் பகுதியை இழந்த ரஷ்யா பெட்ரோலுக்காக இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களை நாடி வருகிறது. 40 சதவீத சுத்திகரிப்பு ஆலைகள் சேதமடைந்துள்ள நிலையில் அவை பழைய நிலைக்கு திரும்ப பல மாதங்களாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால், நீண்ட காலமாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெயை விநியோகித்து வரும் ரஷ்யா, தற்போது இந்தியாவிடமிருந்து பெட்ரோலை இறக்குமதி செய்ய தொடங்கியுள்ளது. Rosneft, Gazprom Neft and Lukoil ஆகிய நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களிடம் இறக்குமதிக்கான பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளது.
















