மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு டெல்லியில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் இருந்து திரிணாமூல் காங்கிரஸ், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், டெல்லியில் மத்திய அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, கிரண் ரிஜிஜூ, எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷ், திமுகவின் திருச்சி சிவா, அதிமுகவின் தம்பித்துரை உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்பிக்கள் பங்கேற்றதால், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திரிணாமூல் காங்கிரஸ், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் கூண்டோடு வெளிநடப்பு செய்தன.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமான விவாதங்களை முன்வைக்கவும், சுமூகமாக மழைக்கால கூட்டத்தொடரை நடத்த ஒத்துழைப்பு வழங்கவும் மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
















