போரினால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் இந்தியா மாபெரும் மூன்று திட்டங்களை அறிவித்துள்ளது. இது குறித்த செய்தித்தொகுப்பை தற்போது காணலாம்…..
சர்வதேச அரங்கில் எப்போதும் மனிதாபிமானத்திற்கும் அமைதிக்கும் இந்தியா தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் தொடுத்தப் போரின் காரணமாக பாலஸ்தீனத்தின் மருத்துவக் கட்டமைப்பு முற்றிலும் நிலைகுலைந்துள்ளது.
மிகவும் நெருக்கடியான இந்தச் சூழலில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இந்தியா மீண்டும் நட்புக்கரத்தை நீட்டியுள்ளது. பாலஸ்தீன மக்களின் வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் இந்தியா மாபெரும் மூன்று திட்டங்களை அறிவித்துள்ளது. பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் (Brussels) நடைபெற்ற பாலஸ்தீன நன்கொடையாளர் குழு கூட்டத்தில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இத்திட்டங்களை அறிவித்தார்.
2017-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதியின் அடிப்படையில்,
பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள ஜெனின் நகரில் பிரம்மாண்டமான சிறப்பு மருத்துவமனையை அமைக்க இந்தியா உறுதியளித்துள்ளது.
காசா மீதான தொடர் தாக்குதலில், சுமார் 5,000 முதல் 6,000 பாலஸ்தீனர்கள் தங்கள் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். அவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில், அங்கு செயற்கை உறுப்பு பொருத்தும் மையம் நிறுவப்படும் எனவும் இந்தியா அறிவித்துள்ளது. இதன்மூலம் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் மறுவாழ்வு பெற உள்ளனர்.
இஸ்ரேல் போரால் காசாவின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் முடங்கியுள்ள நிலையில்,
பாலஸ்தீன இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்தியா ஒரு தொலைநோக்குத் திட்டத்தை வகுத்துள்ளது. அங்குள்ள இளைஞர்களுக்கு வாழ்வாதாரத்தையும் வேலைவாய்ப்பையும் வழங்கும் நோக்குடன் ‘தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனத்தை இந்தியா அமைக்கவுள்ளது.
தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியா கொண்டுள்ள உலகளாவிய நிபுணத்துவத்தைக் கொண்டு, பாலஸ்தீன இளைஞர்களுக்குப் பல்வேறு வேலைவாய்ப்புத் திறன் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இது தவிர, பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் நிவாரண மற்றும் பணி முகமைக்கு இந்தியா 5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி அளிப்பதாக இந்தியா அண்மையில் உறுதியளித்தது.
இந்த மனிதாபிமான திட்டங்களை இந்தியாவிற்கான பாலஸ்தீனத் தூதர் அப்துல்லா எம்.அபு ஷாவேஷ் வரவேற்றுள்ளார். காசாவின் சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதிலும் பொருளாதாரத்தை மீட்பதிலும் இந்திய அரசு அறிவித்துள்ள திட்டங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று பாராட்டியுள்ளார்.
போர்ச் சூழலில் ஆயுதங்களை வழங்காமல், பாலஸ்தீன மக்களின் வாழ்வை மீட்டெடுக்கும் மிகப்பெரிய திட்டங்களை அறிவித்திருப்பது உலக அரங்கில் இந்தியாவின் நன்மதிப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
















