அடுத்த தலைமுறை 6G தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளின் உருவாக்கம் மற்றும் பயன்பாட்டைக் கட்டமைப்பதற்கான அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் 24 நாடுகளுடன் இந்தியாவும் இணைந்துள்ளதாக அமெரிக்க வர்த்தகத் துறை அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அமெரிக்காவின் வட கரோலினாவில் உள்ள சேப்பல் ஹில்லில் கடந்த செப்டம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடைபெற்ற G20 புத்தாக்கத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா தலைமையிலான இந்தியக் குழுவும் பங்கேற்றது.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணைச் செயலாளர் அஜித் குமார் மற்றும் MeitY, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST), தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவிக்கும் துறை (DPIIT) மற்றும் அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அமெரிக்க வர்த்தகத் துறையும், வெள்ளை மாளிகையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை அலுவலகமும் இணைந்து நடத்திய இக்கூட்டத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் செழிப்பை உருவாக்கவும், உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், அனைத்து மக்களுக்கும் வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் கூடிய ஆற்றலை கொண்டுள்ளன என்பதை அங்கீகரிக்கும் வகையில் G20 அமைச்சர்கள் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
6G தொழில்நுட்பத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க, கூடிய இக்கூட்டத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் லுட்னிக் மத்திய வர்த்தகத் துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதாவைச் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
semiconductors துறை மற்றும் AI தொழில்நுட்பக் கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்தும், AI-க்கான பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் data centres ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்தும் ISM 2.0 திட்டத்தில் அமெரிக்காவின் முதலீட்டை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் இரு தரப்பினரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அடுத்த தலைமுறை நெட்வொர்க்குகள் அமெரிக்காவின் பகிரப்பட்ட பாதுகாப்பு நலன்களைப் பிரதிபலிப்பதையும், போட்டித்தன்மையை வலுப்படுத்துவதையும், 6G-யில் புத்தாக்கத்தை ஊக்குவிப்பதையும் உறுதி செய்வதற்கான முயற்சியில் அமெரிக்கா மற்றும் பிற 24 நாடுகளுடன் இந்தியாவும் இணைந்துள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாக அமெரிக்க வர்த்தகத் துறை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம், 6G நெட்வொர்க்குகளுக்கு அடிப்படையாக அமையவுள்ள தொழில்நுட்பத் தரநிலைகள் மற்றும் விரிவான கட்டமைப்பை வடிவமைப்பதில் தாக்கத்தை ஏற்படுத்த விரும்பும் நாடுகளின் குழுவில் இந்தியாவும் இடம்பெறுகிறது.
புதுமை, பொருளாதார வளர்ச்சி மற்றும் குடிமக்களின் மேம்பட்ட வாழ்க்கை தரம் ஆகியவற்றுக்கான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், AI, semiconductors , டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு , ரோபோட்டிக்ஸ் மற்றும் பிற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் மூலோபாயக் கூட்டாண்மைகளை உருவாக்குவதற்கான தனது உறுதிப்பாட்டைமீண்டும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
















