இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியான ஹபீஸ் சயீதின் மகனும் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதியுமான ஹபீஸ் தல்ஹா சயீத், இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தைத் தூண்டும் வகையில் மீண்டும் வெறுப்புப் பேச்சைப் பேசியுள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
லஷ்கர்-ஏ-தொய்பா என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பின் மதகுருப் பிரிவு தலைவராகச் செயல்படும் ஹபீஸ் சயீதின் மகன் ஹபீஸ் தல்ஹா சயீத் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்களைப் பேசி பயங்கரவாதத்தைத் தூண்டுவதை வழக்கமாகவே கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் முழுவதும் உள்ள இஸ்லாமிய பயங்கரவாத முகாம்களுக்கும் பயிற்சி மையங்களுக்கும் சென்று இந்தியா, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு எதிராக ‘ஜிஹாத்’ என்ற பெயரில் ஹபீஸ் தல்ஹா சயீத் பயங்கரவாதத்தைத் தூண்டி வருவதாக அமெரிக்க இஸ்ரேல் இந்திய உளவு அமைப்புகள் உறுதி படுத்தின.
இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்காக இளைஞர்களைத் திரட்டுவது, நிதி சேகரிப்பது மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய நலன்களுக்கு எதிராகச் சதித் திட்டங்களைத் தீட்டுவது போன்ற நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் ஹபீஸ் தல்ஹா சயீத்-தை 2012-ல் தேடப்படும் பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்தது. தொடர்ந்து 2022-ல் மத்திய உள்துறை அமைச்சகம் சயீத்-தை தனிநபர் பயங்கரவாதியாக அறிவித்தது.
ஏற்கெனவே எந்த விலையைக் கொடுத்தாவது காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரிப்போம் என்றும், இந்தியா தண்ணீரை நிறுத்தினால், இந்தியர்களின் மூச்சை நிறுத்துவோம் என்றும் இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் எதிராக வெறுப்புப் பேச்சை பேசி வந்த ஹபீஸ் தல்ஹா சயீத், மீண்டும் கடுமையான வெறுப்புப் பேச்சை இந்தியாவுக்கு எதிராக வெளிப்படுத்தியுள்ளார்.
இந்திய துணைக் கண்டத்தில் கடந்த 500 ஆண்டு கால முஸ்லிம் ஆட்சியைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசியுள்ள ஹபீஸ் தல்ஹா சயீத், டெல்லி யாருக்குச் சொந்தமானது? என்ற கேள்வியை எழுப்பி இந்தியாவுக்கு எதிராக வன்முறையைத் தூண்டியுள்ளார்.
குர்ஆனை முழுமையாக மனப்பாடம் செய்த ஒருவரை பாகிஸ்தானின் ராணுவத் தலைமை தளபதியாகப் பெற்றிருப்பதற்குத் தான் நன்றியுள்ளவனாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள ஹபீஸ் தல்ஹா சயீத், பாகிஸ்தான் ராணுவத் தளபதியான பீல்டு மார்ஷல் அசிம் முனீர் பாகிஸ்தானில் “பக்தி, நம்பிக்கை மற்றும் ஜிஹாத் ஆகிய கருத்துக்களை மீண்டும் உயிர்ப்பிப்பதாகக் கூறியுள்ளார்.
சவூதி அரேபியாவுடனான உறவு மற்றும் மெக்கா ஒப்பந்தம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, ‘இரு புனித மசூதிகளின் பாதுகாவலராக’ பாகிஸ்தான் வகிக்கும் பங்கை பாராட்டிய சயீத், தான் உயிரோடு இருக்கும் வரை இந்தியாவுக்கு எதிரான ஜிஹாத் மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் தொடரும் என்றும் வெளிப்படையாக சூளுரைத்துள்ளார்.
160-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட 2008ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த மும்பை பயங்கரவாதத் தாக்குதல்கள் உட்பட பல கொடூரமான பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணமான இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-ஏ-தொய்பாவின் நோக்கத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் ஹபீஸ் தல்ஹா சயீத்.
இந்தியாவுக்கு எதிரான பொய் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கு வரலாற்றைத் தவறாக சித்தரிக்கும் சயீத் பாகிஸ்தான் ராணுவத் தலைமையை ஜிஹாத்தின் ஒரு பகுதியாக காட்டியுள்ளதை இந்திய அரசு கூர்ந்து கவனித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
















