டெல்லியில் 5 மாடி கொண்ட அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானதில், 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெற்கு டெல்லியில் உள்ள சத்யா நிகேதன் பகுதியில் பிற்பகல் ஒன்றரை மணியளவில் கட்டடம் ஒன்று இடிந்து தரைமட்டமானது. அப்போது, கட்டடம் அருகில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். தரைமட்டமான கட்டடம் தங்கும் விடுதியாக செயல்பட்டதும், அதில், டெல்லி யுனிவர்சிட்டியை சேர்ந்த மாணவர்கள் தங்கியிருந்ததும் தெரிய வந்துள்ளது. உடனே அருகில் இருந்த மக்கள், போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்துவிட்டு, இடிபாடுகளை அகற்றி மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர், இடிபாடுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். கான்கிரீட் இடிபாடுகளில் சிக்கியுள்ள மாணவர்கள் சிலரை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உடனடியாக தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 2 குழுக்கள் மீட்புப் பணியில் களமிறங்கினர். மோப்ப நாய்கள் உதவியுடன் மாணவர்கள் இருப்பிடத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
















