வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களை ஈரான் நிறுத்தும் வரை அந்நாட்டுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படாது என்று அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார். மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவப் படைகளின் நிலைநிறுத்தத்தை 2027-ஆம் ஆண்டு வரை நீட்டித்து அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் ரகசிய உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்புகள் ஒரு நீண்ட போருக்கு அமெரிக்கா தயாராகிறதா ? என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த பிப்ரவரி 28ம் தேதி இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்கா, ஈரான் மீது போரைத் தொடங்கியதுமே உலக கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவீதத்துக்கும் மேல் கையாளும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது.
மேலும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்திவரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் வர்த்தகக் கப்பலைகளையும் தாக்கிவருகிறது.
இருநாடுகளுக்கும் இடையே 14 அம்ச போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையிலும் போர் இன்னும் நீடிக்கிறது.
ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதல்களை நிறுத்தாத வரை, ஈரானுடன் பேசப்போவதில்லை என்று தெரிவித்துள்ள அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வான்ஸ், ஒருநாளில் மட்டும் 15 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் ஹார்முஸ் வழியாக வெளியேறியதாக சுட்டிக் காட்டியுள்ளார்.
முன்னதாக ஒரு சொட்டு எண்ணெய் கூட ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வெளியேற விடமாட்டோம் என்று ஈரான் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஈரான் மீது பொருளாதார D DAY நடவடிக்கையைத் தொடங்கியுள்ள அமெரிக்கா, ஹார்முஸ் ஜலசந்தி மூலமாக ஈரானுக்கு கிடைக்கும் வருவாயைத் தடுத்துள்ளது. இதன் மூலம் சர்வதேச எரிசக்தி விநியோகத்தைத் தங்களால் தான் பாதுகாக்க முடியும் என்பதையும் சர்வதேச நாடுகளுக்கு அமெரிக்கா உணர்த்தியுள்ளது.
ஏற்கெனவே சுமார் 50,000 துருப்புக்களையும் 19 போர்க்கப்பல்களையும் அமெரிக்கப் படை மத்திய கிழக்கில் நிலைநிறுத்தியுள்ள நிலையில் 2027-ஆம் ஆண்டு வரை அந்தப் படைகளின் இருப்பை நீட்டித்து அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஈரான் மீதான கடுமையான பொருளாதார மற்றும் ராணுவ அழுத்தங்களைத் தொடர்ந்து தக்கவைக்கவும், அதிபர் ட்ரம்ப் எடுக்கும் முடிவுகளுக்கு கூடுதல் வாய்ப்புகளையும், ராணுவ பலத்தையும் வழங்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த உத்தரவு அமெரிக்க ராணுவப் பிரிவுகள், வான் பாதுகாப்புப் படைகள், போர் விமானப் படைகள் மற்றும் கடற்படை வீரர்களைப் பாதிக்கும். குறிப்பாக, அமெரிக்க ராணுவத்தின் முக்கிய விரைவுப் பிரிவுப் படையான 82-வது ஏர்போர்ன் பிராந்தியப் பிரிவினரை அதிகம் பாதிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தொடர் நீட்டிப்பு காரணமாகப் படை வீரர்களுக்குக் கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதுடன், ராணுவத் தளவாடங்களின் பராமரிப்புப் பணிகளிலும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆறு மாதங்களுக்கு முன்பு ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை தொடங்கியபோது, விரைவான, தீர்க்கமான தாக்குதல் நடத்துவதாக உறுதியளித்த அமெரிக்கா, இப்போது சுழற்சி முறைகளை நீட்டித்து வருகிறது. இது ஈரான் போர் அடுத்த ஆண்டு வரை நீடிக்கக்கூடும் என்பதையே எடுத்துக்காட்டுகிறது.
















