கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் சொத்துகளை ஏலம் விடும்போது, சம்பந்தப்பட்ட நபர்களுக்கே விற்பனை செய்ய வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் சொத்துகளை வங்கிகள் ஏலம் விடுவது தொடர்பாக, புதிய நெறிமுறைகளை வகுத்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளத. இந்த விதிகள் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடனை திருப்பிச் செலுத்தாதவரிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட அசையா சொத்துகளை அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை வங்கிகள் வைத்திருக்கலாம் என்றும் அதற்குள் அந்தச் சொத்துகளை பொது ஏலத்தில் விற்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. கையகப்படுத்தப்பட்ட சொத்துகளை விற்பனை செய்யும்போது முறைகேடுகள் நடப்பதைத் தவிர்க்க, அவற்றை பொது ஏலம் மூலமாக மட்டுமே விற்கப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. கடனாளிகளிடம் கையகப்படுத்தப்பட்ட சொத்தின் மதிப்பை, வெளி மதிப்பீட்டாளர்களைக் கொண்டு சந்தை மதிப்பை கணக்கிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடனைத் திருப்பிச் செலுத்தாத நபரிடமோ அல்லது அவர்களைச் சார்ந்தவர்களிடமோ, கையகப்படுத்தப்பட்ட அதே சொத்துகளை விற்பனை செய்யவும் வங்கிகளுக்கும், வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
















