சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே காவலரை தாக்கிவிட்டு தப்பியோடிய ரவுடியை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.
குன்றத்தூர் திருமுடிவாக்கம் பகுதியைச் சேர்ந்த தமிழ் அழகு என்ற ரவுடி மீது, பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் குன்றத்தூர் பகுதியில் ரவுடி தமிழ் அழகு, தனது நண்பர் ஆகாஷுடன் சேர்ந்து வெடிகுண்டு தயாரிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனால் அந்த பகுதிக்குச் சென்ற போலீசார், ரவுடியை கைது செய்ய முயன்றனர். அப்போது, காவலரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற ரவுடி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். காலில் குண்டடிப்பட்ட ரவுடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தப்பியோட முயன்ற ஆகாஷை போலீசார் கைது செய்தனர்.
















