இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் ஆலோசனை நடத்தினார்.
கரூர், நீலகிரி மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த நிலையில், இடைத்தேர்தலை சந்திப்பது தொடர்பாக கரூர் மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் நீலகிரி, விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளை உள்ளாட்சி தேர்தலுக்கு தயார்படுத்துவது, கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து செயல்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதனிடையே, வரும் 25ம் தேதி முதல், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் தேதி வரை ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் மாவட்ட அளவில் ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அலுவலகம் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
















