அமெரிக்கா இல்லாமல் உலகம் முன்னேறிச் செல்வதாகவும், அமெரிக்கா தனித்து விடப்பட்ட நிலையில் உள்ளதாகவும் அந்நாட்டு அரசு உயர் அதிகாரிகள் உணர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ‘அமெரிக்கா முதலில்’ (America First) கொள்கையை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றிய அமெரிக்காவின் போர்க் கொள்கைக்கான பாதுகாப்புத் துறை துணைச் செயலாளர் எல்பிரிட்ஜ் கோல்பி அதிபர் ட்ரம்பை விமர்சித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
முன்னணி அமெரிக்க தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை நிபுணரான எல்பிரிட்ஜ் கோல்பி (Elbridge Colby) கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமெரிக்காவின் போர்க் கொள்கைக்கான பாதுகாப்புத் துறை துணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
அமெரிக்கா தனது கவனத்தையும் பாதுகாப்பு வலிமையையும் இந்திய பசிபிக் பகுதியில் சீனாவால் வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதில் தீர்க்கமாக செயல்பட வேண்டும் என்று கூறிய எல்பிரிட்ஜ் கோல்பி, ஆசியாவில் அதிகார சமநிலையை உறுதி செய்வதில் இந்தியாவின் உதவி அமெரிக்காவுக்கு இன்றியமையாதது என்றும் தெரிவித்திருந்தார்.
நேட்டோ மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் தங்கள் பாதுகாப்புச் செலவுகளைத் தாங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அமெரிக்கா மற்ற நாடுகளின் பாதுகாப்புச் சுமையைச் சுமக்கக் கூடாது என்றும் அழுத்தம் கொடுத்து வந்த எல்பிரிட்ஜ் கோல்பி, பெரும் வல்லரசு மோதல் யுகத்தில் அமெரிக்கப் பாதுகாப்பு’ The Strategy of Denial என்ற நூலையும் எழுதியுள்ளார்.
“அமெரிக்காவிற்கான சிறந்த பாதுகாப்பு உத்தி எது?” இந்தக் குழப்பமான கேள்வியை எடுத்துக்கொண்டு, ஒரு புதுமையான உத்தியை கோல்பி தனது நூலில் விவரித்திருந்தார்.
அதிபர் ட்ரம்பின் முதல் பதவி காலத்திலும் வியூகத் திட்டமிடலுக்கான பாதுகாப்புத் துணைச் செயலாளராக பொறுப்பு வகித்த எல்பிரிட்ஜ் கோல்பி கூறிய கருத்துக்களின் அடிப்படையில் ட்ரம்ப் பாதுகாப்புக்காக அமெரிக்காவைச் சார்ந்திருப்பதாக நட்பு நாடுகளைக் குற்றம்சாட்டியதுடன் தங்கள் சொந்தப் பாதுகாப்பிற்குப் அந்நாடுகளே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியிருந்தார்.
இந்நிலையில் கோல்பி, தனது எக்ஸ் பக்கத்தில் தங்கள் நலன்களைப் பாதுகாப்பதற்காக நாடுகள் செயல்படும்போது, அதிபர் ட்ரம்ப் அந்நாடுகளின் எதிரிகளுடன் கைகோர்ப்பதைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
அமெரிக்காவுடனான உறவுக்கான விருப்பம் பிற நட்பு நாடுகளுக்கு அதிகரிப்பதையே காண்பதாகவும் அதிபர் ட்ரம்பின் தலைமையின் கீழ், அந்நாடுகள் அமெரிக்க ஈடுபாட்டின் மதிப்பை உணர்வது மட்டுமல்லாமல், அதை இனியும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழலில் புவிசார் கூட்டணிகள், விநியோகச் சங்கிலிகள் மற்றும் முடிவெடுக்கும் செயல்முறைகளிலிருந்து அமெரிக்காவை உலகம் மேலும் மேலும் துண்டித்து வருவதால் அதிபர் ட்ரம்ப் நிலைகுலைந்து போயுள்ளார் என்பதையே கோல்பி வெளிப்படுத்தியுள்ளதாக கூறப் படுகிறது.
உண்மையில் இந்திய -பசிபிக் பகுதியில் ஜப்பான், இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா கைகோர்த்துள்ளது. தென் சீனக் கடலில் ஜப்பான் தன் இருப்பை முன்னிலைப் படுத்தியுள்ளது.
ஐரோப்பா தனது ஆயுதங்களை முழுவீச்சில் மறுசீரமைத்து, சொந்த ஏவுகணை அமைப்புகளை உருவாக்கி வருகிறது. கனடா, தனது நீர்மூழ்கிக் கப்பல்களின் எண்ணிக்கையை மும்மடங்காக்கி, அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் உள்ள ஒரு முக்கிய கடற்படை சக்தியாக உருவெடுத்துள்ளது.
கிரீன்லாந்து மீது படையெடுப்பதாக மிரட்டுவது, கனடாவை இணைத்துக்கொள்வதாக அறிவிப்பது, ஐரோப்பா முழுவதும் ஆட்சி மாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆயுதமாகச் செயல்படுவது என ட்ரம்பின் நடவடிக்கைகளே காரணம் என்று கூறப் படுகிறது.
சுருக்கமாக சொல்லப்போனால் அதிபர் ட்ரம்பின் கட்டாயத்தின் பேரிலேயே உலகம் அமெரிக்காவைத் தாண்டி முன்னேறிச் செல்கிறது.
முன்னதாக ஐரோப்பாவிலிருந்து விலகிய அதே வேளையில், இந்திய -பசிபிக் பகுதியில் சீனாவுடன் போட்டியிடாமலே அது பயனற்ற முயற்சி என்று தனது தோல்வியை ட்ரம்ப் ஒப்புக்கொண்டார்.
சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் ‘G-2’ என்ற இரு வல்லரசுகளின் கூட்டணி ஏற்பாட்டைச் செய்துகொண்டு, சீனாவை தனக்கு இணையான வல்லரசு நிலைக்கு ட்ரம்ப் உயர்த்தியுள்ளார். மேலும் தைவான், இந்தோ-பசிபிக் மற்றும் உலக நாடுகள் குறித்த சீன அதிபரின் தொலைநோக்கு பார்வையை ஒப்புக்கொள்வதாகவே ட்ரம்பின் சீனப் பயணம் அமைந்திருந்ததாக கூறப் படுகிறது.
பாதுகாப்புத் துறைக்கு அப்பால், அமெரிக்கா மற்றும் சீனா மீதான சார்புநிலையைக் குறைப்பதற்காக நாடுகள் மற்றும் கூட்டமைப்புகள் இருதரப்பு மற்றும் பலதரப்பு வர்த்தகத்தை வலுப்படுத்தி வருகின்றன.
குறிப்பாக இந்தியாவுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தங்கள், ட்ரம்ப் உலகளவில் ஏற்படுத்திய இடையூறுகளைச் சரிசெய்ய உதவுகின்றன.
இதில் இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் , ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடனான இந்தியாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மிகவும் முக்கியமானவை ஆகும்.
இரு தரப்புக்கும் இழப்பை ஏற்படுத்தும் அணுகுமுறையான பாதுகாப்புக் கொள்கையை விட இந்தியா முன்னெடுக்கும் தடையற்ற வர்த்தக அணுகுமுறையே வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அதிக நன்மை பயக்கும் என்பதை விரைவில் அமெரிக்காவுக்கு புரியும் என்று அரசியல் வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவின் வியூகத் திட்டத்தில் உள்ள உத்திகளின் வெற்றி கூட்டணிகளையே சார்ந்திருந்தது என்றும், ‘அமெரிக்கா முதலில்’ என்ற கொள்கை அடிப்படையில் ‘அமெரிக்கா தனித்து’ என்ற நிலைக்குச் சென்றுவிட்டதால், அந்த வியூகத் திட்டம் பயனற்றதாகிவிட்டது. இதைத் தான் அமெரிக்காவின் போர்க் கொள்கைக்கான பாதுகாப்புத் துறை துணைச் செயலாளரான எல்பிரிட்ஜ் கோல்பி தெரிவித்துள்ளார்.
அதேசமயம் Middle Powers என்று அழைக்கப்படும் இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் போன்றவை அமெரிக்காவை முழுமையாக நம்பியிராமல், தங்களுக்குள் புதிய பாதுகாப்பு மற்றும் வர்த்தகக் கூட்டணிகளை உருவாக்கி வருவதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
















