கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து விதத்திலும் விருதுநகர் மாவட்டத்தை முன்னேற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கினை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்த நிர்மலா சீதாராமனுக்கு, கல்லூரி மாணவ மாணவியர் சிலம்பாட்டம், கரகாட்டம், காவடி ஆட்டம் ஆடி வரவேற்பு அளித்தனர். இதையடுத்து உள் விளையாட்டு அரங்கினை திறந்து வைத்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கல்லூரி மாணவிகளுடன் இணைந்து கூடைப்பந்தாட்டம் விளையாடினார்.
இதைத்தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்,
ரமண மஹரிஷி பிறந்த ஊர் என்ற பெருமையை திருச்சுழி பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
குழந்தைகளுக்கு விளையாட்டில் முக்கியத்துவம் வழங்க பல்வேறு கட்ட முயற்சிகளை பிரதமர் மோடி மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து விதத்திலும் விருதுநகர் மாவட்டத்தை முன்னேற்ற மத்திய அரசு முயன்று வருவதாகவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
















