கோவை மாவட்டம் கணியூரில் வாக்காளர்களுக்கு திமுகவினர் டோக்கன் விநியோகம் செய்வதாக எழுந்த புகாரை தொடர்ந்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சூலூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கணியூர் ஊராட்சி, சின்னத்தோட்டம் பகுதியில், திமுகவினர் வாக்காளர்களை வரவழைத்து ரகசிய எண்கள் மற்றும் வாக்காளர்கள் பெயரை எழுதி டோக்கன்களை விநியோகிப்பதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கிடைத்தது.
இந்த டோக்கன்களைக் காண்பித்தால் குறிப்பிட்ட இடங்களில் பரிசுப் பொருட்கள் அல்லது பணம் பெற்றுக்கொள்ளலாம் என வாக்காளர்களிடம் கூறியதாகவும் தெரிகிறது. இதனால் அந்தப் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.
மேலும் பள்ளி சிறுவர்களும் தங்களது வீட்டில் உள்ள குடும்ப அட்டைகளை எடுத்துக்கொண்டு டோக்கன் பெற அங்கு சென்றனர். இதுகுறித்த தகவலின்பேரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சின்னத்தோட்டம் பகுதிக்கு விரைந்தனர்.
அதிகாரிகள் வருவதைக் கண்டதும் அங்கிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து அங்கு அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக ஏராளமான டோக்கன்கள் இருப்பது தெரியவந்தது. இந்த விவகாரம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















