தமிழக தேர்தல் பிரச்சாரத்தை புறக்கணிக்க ராகுல்காந்தி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக தலைமையிலான கூட்டணியின் பொதுக்கூட்டம் புதன்கிழமையன்று சேலத்தில் நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்க வருமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு திமுக தலைமை அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ராகுல் காந்தி தரப்பில் இருந்து சாதகமான பதில் வரவில்லை என்று கூறப்படுகிறது.
சட்டமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்த சமயத்தில் திமுகவுடன் ஏற்பட்ட அதிருப்தியால் தவெகவுடன் கூட்டணி அமைக்க ராகுல் விரும்பினார். இருப்பினும் சோனியா மறுப்பு தெரிவித்த காரணத்தால் திமுகவுடன் கூட்டணி இறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராகுல்காந்தி தொடர்ந்து அதிருப்தியில் இருந்து வருவதால், தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, புதுச்சேரி தேர்தல் பிரசாரத்திற்கு ராகுல்காந்தி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் ஒரே நாளில் பிரசாரத்துக்கு சென்றபோதும் ஒருவரை ஒருவர் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. தற்போது, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர், ராகுல்காந்தி பிரசாரத்திற்கு வருவார் என்று கூறிவந்தாலும், மற்றொரு மேலிட பொறுப்பாளரான முகுல் வாஸ்னிக் அதை உறுதிப்படுத்தவில்லை. அதனால், ராகுல்காந்திக்கு நெருங்கிய நண்பரான கமல்ஹாசன் மூலம் அழைப்பு விடுக்க தி.மு.க. தலைமை முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
















