மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வரும் 8 தேதி முதல் விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 10ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிப்பார்.
மணிப்பூரில் மைத்தேயி- கூகி பழங்குடியினத்தவர் இடையே கடந்த மே மாதம் 3 மூன்றாம் தேதி முதல் மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூலை 19ஆம் தேதி இரண்டு பழங்குடி பெண்களுக்கு எதிரான வன்முறை காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வன்முறை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலிருந்தே அமளியில் ஈடுபட்டன. இதனையடுத்து நாடாளுமன்றம் இன்றும் எட்டாவது நாளாக முடக்கப்பட்டன.
முன்னதாக ஜூலை 26 ஆம் தேதி மத்தியில் ஆளும் மோடியின் தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த தீர்மானத்தை ஏற்பதாக சபாநாயகர் அறிவித்ததோடு பின்னர் விவாதத்திற்கான நாள் அறிவிக்கப்படும் என கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று மக்களவையில், எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வருகின்ற எட்டாம் தேதி விவாதம் நடைபெறும் என்றும், நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது ஆகஸ்ட் 10ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.