அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செல்லும் என்றும், கைது செய்யப்பட்டதில் சட்ட விரோதம் இல்லை என்றும், அவரை அமலாக்கத்துறை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது.
சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 13-ம் சோதனை நடத்தினர். இதனடிப்படையில், 14-ம் தேதி அதிகாலையில் கைது செய்தனர். இதை எதிர்த்து, செந்தில் பாலாஜி மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று 3-வது நீதிபதியும் தீர்ப்பளித்தார்.
இத்தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜியும், அவரது மனைவி மேகலாவும் தனித்தனியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதேபோல, அமலாக்கத்துறையும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுக்கள் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எல்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பிலும், அமலாக்கத்துறை தரப்பிலும் பலமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “செந்தில் பாலாஜி விசாரணை நடத்த விடாமல் அனைத்து வகைகளிலும் தடுத்தார். இடையூறுகளை ஏற்படுத்தினார். தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாலேயே அவர் கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் உள்ளதால் தற்போது விசாரணைக்கு உட்படுத்த முடியவில்லை.
எனவே, அவர் மருத்துவமனை மற்றும் நீதிமன்ற காவலில் உள்ள இந்த காலகட்டத்தை முதல் 15 நாட்களாக உச்சநீதிமன்றம் எடுத்துக் கொள்ளக் கூடாது. மேலும், தாக்கப்பட்டதாக செந்தில் பாலாஜி கூறியிருக்கும் நிலையில், நீதிபதிகளிடம் காயத்தை காண்பிக்கவில்லை. ஆகவே, செந்தில் பாலாஜியிடம் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்துவது மிக மிக அவசியம்” என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களும் கடந்த 2-ம் தேதி நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழலில், செந்தில் பாலாஜி மேலமுறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் இல்லை என்றும், கைது செல்லும் என்றும் உத்தரவிட்டனர்.
அதோடு, சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு செல்லும் என்றும், கைது செய்யப்பட்ட பிறகு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது என்றும் தீர்ப்பளித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்கவும் அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுக்க அனுமதி கோரி, அமலாக்கத்துறை சார்பில் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி காணொளி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது.