நாடாளுமன்றத்தில் அரசின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து தெளிவுபடுத்துவது தொடர்பாக, முக்கிய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு மீது, எதிர்க்கட்சிகள் கடந்த மாதம் 26-ம் தேதி நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. இதை ஏற்றுக் கொண்ட மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, ஆகஸ்ட் 8 மற்றும் 9-ம் தேதி இத்தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும் என்றும், இதற்குப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 10-ம் தேதி விளக்கம் அளித்து பேசுவார் என்றும் தெரிவித்திருந்தார்.
அதன்படி, நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றும், நேற்று முன்தினமும் பேசினார்கள். ராகுல் காந்தி பேசியது கடும் சர்ச்சையைக் கிளப்பி நிலையில், மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜ்ஜூ, ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து பேசினார்கள். தொடர்ந்து, நேற்று மாலை நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார்.
இதையடுத்து, நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திற்கு விளக்கம் அளித்து இன்று மாலை 4 மணிக்கு பாரத பிரதமர் மோடி பதிலளிக்க இருக்கிறார். இந்த சூழலில் தான், நாடாளுமன்றத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்துவது தொடர்பாக, இன்று காலை முக்கிய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி இருக்கிறார். இந்த ஆலோசனையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, பியூஸ் கோயல், அர்ஜூன் ராம் மேக்வால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.