மதுரை இரயில் விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்களும், சிறப்பு விமானம் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
உத்திரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து, தமிழகத்தில் உள்ள இராமேஸ்வரத்திற்கு ஆன்மீக சுற்றுலா இரயில் பெட்டியில் 63 பயணிகள் பயணம் செய்தனர். இந்த இரயில் பெட்டி கடந்த 25-ம் தேதி அதிகாலை மதுரை இரயில் நிலையத்தில் உள்ள போடி இரயில் பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தீ விபத்தில் சிக்கியது. இதில் 9 பேர் உயிரோடு தீயில் கருகி பலியானார்கள். பலர் பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
விபத்து குறித்து இரயில்வே போலீசார், தடயவியல் நிபுணர்கள் மற்றும் இரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த டிராவல்ஸ் நிறுவன ஊழியர்களே, இரயிலில் சட்ட விரோதமாக, இரயில் பெட்டியில் சிலிண்டர், விறகு, அடுப்பு உள்ளிட்டவற்றை ஏற்றிக் கொண்டு வந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
இதனால், ஆன்மீக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த லக்னோ அடுத்துள்ள சித்தாபூரில் உள்ள பாசில் என்ற டிராவல்ஸ் நிறுவனம் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், தீ விபத்துக்குக் காரணமான 2 சமையல் ஊழியர்களை கைது செய்தனர்.
இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரயில்வே நிர்வாகம் சார்பில் ரூ.10 லட்சமும், தமிழக அரசு சார்பில் ரூ. 3லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.
மேலும், விபத்தில் உயிரிழந்தவர்கள் உடல், மதுரை அரசு மருத்துவனையில் உடற்கூராய்வு நடத்திய பின்னர், அவர்களது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கிருந்து சிறப்பு விமானத்தில் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதேபோல், உயிர் தப்பிய பயணிகள் அனைவரும் சொந்த ஊருக்குச் செல்லும் வகையில், சிறப்பு விமானம் மூலம் லக்னோவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.