கர்நாடகா மாநிலத்தில் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில், ஆந்திராவைச் சேர்ந்த ஒரு குழந்தை உள்பட15 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், கர்நாடாக மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தனர். இவர்கள் வந்த டாடா சுமோ கார், கர்நாடகா மாநிலம் சிக்கபல்லப்பூர் பகுதியில் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும், பாகேபள்ளி காவல்துறையினரும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
எனினும், கார் அதிவேகமாக வந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்து விட்டனர். மற்றவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனினும், இவர்களின் நிலையும் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. விபத்தில் சிக்கிய அனைவரும் பேச முடியாத நிலையில் இருப்பதால், இவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.