வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் ராஜஸ்தான் மாநிலம் சுற்றுலா, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முதலிடம் வகித்தது. தற்போதைய காங்கிரஸ் ஆட்சியில் குற்றங்களில் முதலிடம் வகிக்கிறது என்று உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சனம் செய்திருக்கிறார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. ஆகவே, இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பா.ஜ.க. சார்பில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஆம்பர் சட்டமன்றத் தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், “5 ஆண்டுகளுக்கு முன்பு முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க. அரசு ராஜஸ்தான் மாநிலம் வளர்ச்சி அடையும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது.
குறிப்பாக, ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் என பார்த்துப் பார்த்து நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. சுற்றுலா, வேலைவாய்ப்பு, மேம்பாடு ஆகியவற்றில் ராஜஸ்தான் முதலிடத்தில் இருந்தது.
ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் ராஜஸ்தானின் நிலை என்ன? குற்றங்களில் முதலிடத்தில் இருக்கிறது. கடந்த 55, 60 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு செய்யாததை, பிரதமர் மோடி 9 ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறார்.
குறிப்பாக, இந்த 9 ஆண்டுகளில் 12 கோடி ஏழைகளுக்கு கழிப்பறை, 4 கோடி பேருக்கு வீடு, 4 கோடி பேருக்கு மின் இணைப்பு, 10 கோடி ஏழைகளுக்கு உஜ்வாலா யோஜனா இணைப்பு ஆகியவை கிடைத்திருக்கின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக, காங்கிரஸ் ஆட்சியில் இராம நவமி ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதேசமயம், பா.ஜ.க.வின் இரட்டை இன்ஜின் அரசு, அயோத்தியில் இராமர் கோயிலைக் கட்டி இருக்கிறது” என்றார்.