ஜம்மு — காஷ்மீரில், மாநில கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் வீடு உட்பட ஆறு இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.
ஸ்ரீநகரைச் சேர்ந்த ஹிலால் மிர் என்பவர் போலியாக கூட்டுறவு சங்கம் ஒன்றை தொடங்கி கடன் வழங்கும்படி ஜம்மு காஷ்மீர் கூட்டுறவு சங்கத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு விண்ணப்பித்தார்.
இந்நிலையில், அவர் வழங்கிய ஆவணங்களை சரிபார்க்காமல் கூட்டுறவு வங்கியின் அப்போதைய தலைவர் முஹமது ஷபி தார், 223 கோடி ரூபாய் கடன் வழங்கியதாக தெரிகிறது. இதுதொடர்பாக புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் இந்த முறைகேட்டிற்கு கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் முஹமது ஷபியும் கூட்டாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கை அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜம்மு – காஷ்மீரில் உள்ள கூட்டுறவு வங்கி, முன்னாள் தலைவர் முஹமது ஷபியின் வீடு உட்பட ஆறு இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.