தூத்துக்குடி இரயில் நிலையத்தில் வெள்ளம் வடிந்ததைத் தொடர்ந்து, ஐந்து நாட்களுக்கு பிறகு இன்று சென்னை – தூத்துக்குடி இடையே இரயில் சேவை மீண்டும் தொடங்கியது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த வாரம் தென் தமிழகத்தின் அநேக இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக கடந்த 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதி கனமழை வெளுத்து வாங்கியது.
நான்கு மாவட்டங்களிலும் வரலாறு காணாத வகையில், பெய்த கனமழையால், பெரும்பாலான சாலைகளையும், குடியிருப்புகளையும், இரயில் தண்டவாளங்களையும் வெள்ளம் சூழ்ந்து குளம் போல் காட்சியளித்தன. இதனால், தூத்துக்குடியில் இரயில் சேவை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், தூத்துக்குடியில் மழை தற்போது ஓய்ந்துள்ளது. இரயில் தண்டவாளங்களில் தேங்கியிருந்த வெள்ளம் வடிந்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி இரயில் நிலையத்திலிருந்து முதற்கட்டமாக நேற்று மாலை மைசூர் எக்ஸ்பிரஸ் இரயில் இயக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சென்னையில் இருந்து ஐந்து நாட்களுக்குப் பின்பு முத்துநகர் எக்ஸ்பிரஸ் தூத்துக்குடிக்கு இரயில் நிலையத்திற்கு இன்று காலை வந்தடைந்தது.
நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற முத்துநகர் எக்ஸ்பிரஸ் இரயில், இன்று காலை தூத்துக்குடி வந்தடைந்தது. திருச்செந்தூர் இரயில் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, திருச்செந்தூரில் இருந்து எழும்பூர் செல்லும் விரைவு இரயில் திருநெல்வேலியில் இருந்து இரவு 9.35 மணிக்கு புறப்பட்டு செல்லும். அதேபோல், திருச்செந்தூர் – பாலக்காடு செல்லும் இரயில் மதியம் 1.30 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து செல்லும் என்று தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது.