காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாட்டை பின்னோக்கி கொண்டு செல்லும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நேற்று மதுரையில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்தாவது:
2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்பதே தேசிய ஜனநாயக கூட்டணியின் நோக்கம். ஆனால் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை பார்க்கும் போது அது இந்தியாவை பின்னோக்கி கொண்டு செல்லும் என்று தெரிகிறது. அது ஒரு பிற்போக்கு ஆவணம் என அவர் தெரிவித்தார்.
பாதுகாப்புத் துறையில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. நாம் இறக்குமதி செய்து வந்த ஆயுதங்கள், ஏவுகணைகள், டாங்கிகள், வெடிமருந்துகள் அனைத்தும் தற்போது ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
2014ல் 600 கோடி மதிப்பிலான பாதுகாப்புப் பொருட்களை ஏற்றுமதி செய்தோம். இன்று ரூ.31,000 கோடிக்கு மேல் ஏற்றுமதி செய்கிறோம்.
பாஜக அரசின் சாதனைகளையும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தையும் ஒப்பிட்டுப் பேசிய சிங், கடந்த 5 ஆண்டுகளில், எங்கள் அரசு எந்த ஊழல் வழக்கையும் சந்திக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியின் போது பாதுகாப்புத் துறையில் பல ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன என ராஜ்நாத் சிங் கூறினார்.
வலுவான பொருளாதாரமாக இந்தியா வளர்ந்து வருவதை உலகம் பார்க்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதம் தலைவிரித்தாடியது. ஆனால் மோடியின் ஆட்சியில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது.