நாட்டில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட போது ஜனநாயகம் ஆபத்தில் இல்லையா என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டம் கன்ஹான் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.
அப்போது,மோடி மூன்றவாது முறையாக ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்திற்கு ஆபத்து ஏற்படும் என இண்டி கூட்டணி தலைவர்கள் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். நாட்டில் எமர்ஜென்சி நடைமுறைபடுத்தபட்ட போது ஜனநாயகம் ஆபத்தில் இருக்கவில்லையா? மோடி ஆட்சியில் ஏழைகள் முன்னேறுவதை இண்டி கூட்டணி தலைவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
இருபதுக்கும் மேற்பட்ட தலைவர்கள் இண்டி கூட்டணி என்ற பெயரில் ஒன்றுகூடி, மக்களை பிளவுபடுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய அவர், மக்கள் ஒற்றுமையாக இருந்து தேசிய நலனுக்காக வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். சமூகங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தி, சனாதன தர்மத்தை ஒழிக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
ஒரு நாடு ஒரே அரசியலமைப்பு என்ற கருத்தை நாட்டில் செயல்படுத்த காங்கிரஸ் அனுமதிக்கவில்லை என்று பிரதமர் கூறினார். அரசியலமைப்புச் சட்டம் அவர்களுக்கு முக்கியமானதாக இருந்தால், 70 ஆண்டுகளாக ஏன் செயல்படுத்தவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
பாஜக ஆட்சியில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அரசியல் சட்டம் அமல்படுத்தப்பட்டதாகவும், ஆனால் காங்கிரஸ் ஜம்மு காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை உயிர்ப்புடன் வைத்திருந்தது என்றும் அவர் குற்றம்சாட்டினார். இந்திய அரசியலமைப்பும் ஜம்மு காஷ்மீரின் அரசியலமைப்பும் வேறு என்று தெரிவித்த பிரதமர், 370வது சட்டப்பிரிவை நீக்கி ஜம்மு காஷ்மீரில் அரசியலமைப்பு அமல்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
பல தசாப்தங்களாக அம்பேத்கருக்கு நாட்டின் உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா வழங்க மறுத்ததற்கும், தலித் மற்றும் பழங்குடியினரை புறக்கணித்ததற்கும் காங்கிரஸ் மீது அவர் சாடினார்.