கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ஊழல்வாதிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஏற்ற 70 சிறிய லாரிகள் தேவை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் ஹாஜிபூரில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், மத்தியில் காங்கிரஸ், ராஷ்டிர ஜனதா தள கூட்டணி ஆட்சியின்போது 10 ஆண்டுகளில் 35 லட்ச ரூபாய் மட்டுமே மோசடிக்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
ஆனால் கடந்த பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்தப் பணத்தை வாகனத்தில் ஏற்ற வேண்டுமென்றால், 70 சிறிய லாரிகள் தேவைப்படும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
காங்கிரஸ், ராஷ்டிர ஜனதா தளம் கூட்டணியை விமர்சித்த பிரதமர் மோடி, அவர்களுக்கு வாக்கு வங்கி தான் முக்கியமே தவிர, பொதுமக்கள் அல்ல என்றும் விமர்சித்தார்.
ஒருவேளை இந்தியா கூட்டணிக்கு யாராவது வாக்களித்தால் அந்த வாக்கு வீணாகிவிடும் என்று கூறிய பிரதமர், பீகார் மக்கள் சிந்திக்கும் திறன் படைத்தவர்கள் என்பதால், தேசத்தைக் கட்டமைக்கும் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.