நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், முதல் முறையாக அதிமுக பல தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது . ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக தொடர்ந்து, பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. இது அதிமுக தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.
எந்த தேர்தல் ஆனாலும் பதிவான மொத்த வாக்குகளில், குறைந்தபட்சம் ஆறில் ஒரு பங்கு வாக்குகளைப் பெறவேண்டும். அப்போது தான், வேட்பாளரால் கட்டப்பட்ட வைப்பு தொகை திரும்ப பெற முடியும்.
பதிவான வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகள் வாக்குகள் பெறாத வேட்பாளரை டெபாசிட் இழந்த வேட்பாளர் எனக் கூறுவார்கள். இதில் தான் அதிமுகவுக்கு இப்போது பெரும் சறுக்கல் ஏற்பட்டுள்ளது.
1972ம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப் பட்ட அதிமுக , தமிழகத்தை ஏழு முறை ஆட்சி செய்து, 13 நாடாளுமன்றத் தேர்தல்களை சந்தித்துள்ளது.
இந்த தேர்தலில், தனது பிரபலமான ‘இரண்டு இலை’ சின்னத்தில் போட்டியிட்ட 34 தொகுதிகளில் 7 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்து இருக்கிறது.
அதன் பிறகு 2019ம் ஆண்டு வரை, தமிழக தேர்தல் வரலாற்றில் அதிமுக டெபாசிட் இழந்தது இல்லை என்று சொல்லப்படுகிறது.
கடந்த காலங்களில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்த பொதுத் தேர்தல்களில் கூட எல்லாத் தொகுதிகளிலும் டெபாசிட் வாங்கி இருக்கிறது.
2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில், 37 இடங்களில் வெற்றி பெற்று, கன்னியாகுமரி மற்றும் தருமபுரியில் மட்டும் பாஜக மற்றும் பாமகவிடம் அதிமுக தோற்றது. அப்போது கூட, கன்னியாகுமரியில், அதிமுகவின் வேட்பாளர் ஜான் தங்கம் 17.8% வாக்குகளைப் பெற்று டெபாசிட்டை காப்பாற்றினார்.
1977ஆம் ஆண்டிலிருந்து இதுவரை நடந்த 1,500க்கும் மேற்பட்ட அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட்ட சட்டமன்றத் தேர்தல்களில், பத்துக்கும் குறைவான அதிமுக வேட்பாளர்களே டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.
ஆனால், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், அதிமுக 32 தொகுதிகளில் போட்டியிட்டு 7 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்துள்ளது.
மேலும், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், 9 தொகுதிகளில் வெறும் 9 சதவீத வாக்குகளே அதிமுக பெற்றிருக்கிறது.
தென் சென்னை, வேலூர், தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஏழு மக்களவைத் தொகுதிகளில் அதிமுக டெபாசிட் தொகையை இழந்துள்ளது.
தென் தமிழகத்தில் அதிமுக இதுவரை இல்லாத தோல்வியை பெற்றிருக்கிறது என்றே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
கோயம்பத்தூர், தருமபுரி ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பொள்ளாச்சி, சேலம், திருப்பூர் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு தமிழகத்திலும் அதிமுகவுக்கு இந்த தேர்தல் பெரும் பின்னடைவை ஏற்படுத்திருக்கிறது.
குறிப்பாக, கோயம்பத்தூர், நீலகிரி, தர்மபுரி ஆகிய தொகுதிகளில் அதிமுக மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
கோயம்புத்தூரிலும், நீலகிரியிலும் பாஜக வேட்பாளர்களான அண்ணாமலை மற்றும் எல்.முருகன் அதிக வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர். அதுபோல தர்மபுரியில், பாஜக கூட்டணி கட்சியான பாமகவின் வேட்பாளரான சௌமியா அன்புமணி, திமுக வேட்பாளரை விட 30000 வாக்குகள் குறைந்து இரண்டாம் இடத்தைப் பெற்றிருக்கிறார்.
அதிமுகவின் கோட்டை என்று சொல்லப்படும் கொங்கு பகுதிகளில் , அதிமுக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது. ஆனாலும் ஒரே ஆறுதல், மேற்கு தமிழகத்தில், அதிமுக 27.8 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது.
கரூர்,மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், தஞ்சாவூர், மற்றும் திருச்சி ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய மத்திய தமிழகத்தைப் பொறுத்தவரை, அதிமுக 23.5 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது.
2019 மக்களவை தேர்தலில் தோல்வி. அடுத்து 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது. 2022ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி. இப்போது 2024 மக்களவை தேர்தலில் தோல்வி என எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தொடர்ந்து நான்கு தேர்தல்களில் பெரும் சரிவை சந்தித்துள்ளது.
இது அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது. அதிமுக கட்சிக்குள்ளும் சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.