பிரதமர் மோடியை அரசியலமைப்பை வணங்க வைத்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் மோடி பல்வேறு தருணங்களில் அரசியலமைப்பிற்கு மரியாதை செலுத்திய புகைப்படங்களை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தங்களது நிர்வாகத் தோல்வியை மறைத்து தேவையற்ற விஷயங்களைக் கொண்டாடுவதை திமுக வழக்கமாகக் கொண்டிருப்பதாகவும்,
அப்படி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின், எழுதிக் கொடுத்ததை அதன் உண்மைத் தன்மை தெரியாமல், பேசியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
“இண்டி” கூட்டணி பிரதமர் மோடியை அரசியலமைப்பின் முன் தலைவணங்க வைத்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதைக் குறிப்பிட்ட அண்ணாமலை,
குஜராத் முதலமைச்சராக இருந்தபோது பிரதமர் மோடி அரசியலமைப்பு சட்டப்புத்தகத்தை யானையில் வைத்து ஊர்வலமாக எடுத்து வந்து மரியாதை செலுத்தியதை நினைவு கூர்ந்துள்ளார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது பிரதமர் மோடி கொண்டுள்ள மரியாதை குறித்து தமிழக முதலமைச்சருக்கு நினைவூட்டுவது தனது கடமை என்று கூறியுள்ள அண்ணாமலை,
பல்வேறு தருணங்களில் பிரதமர் மோடி அரசியலமைப்பிற்கு மரியாதை செலுத்திய புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
இதுபோன்ற தேவையற்ற கொண்டாட்டங்களைத் தவிர்த்து, மக்கள் நலனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறிதாவது அக்கறை செலுத்த வேண்டுமெனவும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.