ரஷ்யா- உக்ரைன் போர் விவகாரத்தில் நடுநிலை வகிக்கவில்லை என்றும், அமைதியின் பக்கமே இந்தியா எப்போதும் நிற்பதாகவும் பிரதமர் மோடி தெளிவுபடுத்தினார்.
உக்ரைன் தலைநகர் கீவில் அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்த பிரதமர் மோடி,போரின் ஆரம்ப நிலையில் உக்ரைனில் தங்கியிருந்த இந்திய மக்களும், மாணவர்களும் தாயகம் திரும்ப உதவியதற்காக ஜெலென்ஸ்கிக்கு நன்றி தெரிவித்தார்.
போரின்போது இந்தியா நடுநிலை வகிக்கவில்லை என்றும், அமைதியின் பக்கமே எப்போதும் நிற்பதாகவும் தனது நிலைப்பாட்டை பிரதமர் மோடி தெளிவுபடுத்தினார்.
மேலும், மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினை அண்மையில் சந்தித்ததை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, இது போருக்கான காலமல்ல என்றும், பிரச்னைகளுக்குப் போர்க்களத்தில் தீர்வுகாண முடியாது என்றும் தெரிவித்ததை சுட்டிக்காட்டினார்.
ரஷ்யா, உக்ரைன் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட இந்தியா தயாராக இருப்பதாக கூறிய பிரதமர் மோடி, இதற்காக தனிப்பட்ட முறையில் உதவவும் தாம் ஆர்வமுடன் இருப்பதாக தெரிவித்தார்.