தமிழ்நாடு அரசும், காவல்துறையும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பதாக இந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் 300 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் விநாயகர் சிலை வைக்க காவல்துறை கடும் நெருக்கடி விதிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்து முண்ணனி கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார், சிலை வைக்கவும், வழிபடவும் அனுமதி மறுக்கப்பட்டால் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
இதேபோல சேலத்திலும் விநாயகர் சிலைகளை வைக்கவும், பூஜைகள் செய்து வழிபடவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே எல்லைப்பிடாரி அம்மன் கோயில் வளாகத்தில் இந்து முன்னணி சேலம் கோட்ட தலைவர் சந்தோஷ் குமார் பிரபு தலைமையில் விநாயகருக்கு பூஜைகள் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், விநாயகர் சிலை வைக்கக் கடும் கட்டுப்பாடுகளை விதித்து காவல்துறையை மோதவிட்டு அரசு வேடிக்கை பார்ப்பதாகக் குற்றம் சாட்டினார்.