பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி, இன்றுமுதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு பாஜகவினர் உதவ வேண்டுமென மத்திய அமைச்சர் அமித் ஷா கேட்டுக்கொண்டார்.
பிரதமர் மோடியின் 3-ஆவது பதவிக்காலத்தின் முதல் நூறு நாள் சாதனைகள் அடங்கிய புத்தக தொகுப்பை அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் வெளியிட்டனர்.
பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, பிரதமர் மோடியின் பிறந்த நாளை பல்வேறு கல்வி நிறுவனங்கள் கொண்டாடுவதாகவும், இன்றுமுதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு பாஜகவினர் உதவ வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
ஏழை குடும்பத்தில் பிறந்த மோடி, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமராக உயர்ந்தது சாதாரணமானது அல்ல என கூறிய அவர், 15 நாடுகள் தங்களது உயரிய விருதை மோடிக்கு அளித்து கெளரவித்ததையும் நினைவுகூர்ந்தார்.
நவீன கல்வி முறையில் பாரம்பரியத்தை புகுத்தி தேசிய கல்விக் கொள்கையை பிரதமர் மோடி கொண்டுவந்ததாகவும், பிராந்திய மொழிகளுக்கு அந்தக் கொள்கை மதிப்பளிப்பதாகவும் மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் ஆட்சியில் உலகளவில் உற்பத்தியின் மையமாக இந்தியா உயர்ந்ததாக கூறிய அவர், டிஜிட்டல் இந்தியா உள்பட மத்திய அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டார்.