தேர்தல் ஆணையம், காவல் துறை மற்றும் நீதித்துறை என அரசு நிறுவனங்களை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
ஹரியானாவில் பாஜக மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சியமைக்கும் நிலையில், டெல்லியில் பாஜக தலைமையகத்தில் பிரதமர் மோடி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது மக்களவைத் தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பாக காங்கிரஸ் அமளியில் ஈடுபட்டதாக கூறிய அவர், தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாட அவர்கள் முயற்சிப்பதை சுட்டிக்காட்டினார்.
இந்திய ஜனநாயகத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைக்க பல்வேறு சதித் திட்டம் தீட்டப்பட்டதாகவும், அதற்கு ஹரியானா மக்கள் தக்க பதிலளித்து விட்டதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்தால், ஜம்மு- காஷ்மீர் தீப்பற்றி எரியும் என காங்கிரஸ் விமர்சித்ததை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, தற்போது காஷ்மீர் அழகாக மலருவதாக கூறினார். மேலும், நாட்டின் வளர்ச்சிக்காக கடினமான முடிவுகளை எடுக்க தேர்தல் முடிவுகள் உத்வேகம் அளிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.