வாக்கு வங்கி அரசியலுக்காக இஸ்லாமியர்களிடையே காங்கிரஸ் அச்ச உணர்வை விதைப்பதாக பிரதமர் மோடி விமர்சித்தார்.
மகாராஷ்டிராவில் 10 மருத்துவக் கல்லூரிகள், நாக்பூரில் பாபாசாகேப் அம்பேத்கர் சர்வதேச விமான நிலையம் மற்றும் ஷீரடி விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டடம் உள்ளிட்ட 7 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆட்சியில் இதுபோன்ற வளர்ச்சி ஏற்படவில்லை என குற்றம்சாட்டினார். மேலும் சமூகத்தை பிளவுபடுத்தும் அரசியலை முன்னெடுத்து, வாக்காளர்களை தவறாக காங்கிரஸ் வழிநடத்துவதாக பிரதமர் மோடி விமர்சித்தார்.
இஸ்லாமிய சகோதரர்கள் மத்தியில் நிலவும் சாதி வேறுபாடு தொடர்பாக எந்தவொரு காங்கிரஸ் தலைவர்களும் கருத்து தெரிவிப்பதில்லை என்று கூறிய பிரதமர் மோடி, அவர்கள் மத்தியில் அச்சத்தை விதைத்து தங்களது வாக்கு வங்கியை காங்கிரஸ் பலப்படுத்திக் கொள்வதாகக் குறிப்பிட்டார்.