சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். போரில் ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா இயக்கத்தினரும், ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், சிரியா, ஈராக்கில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்களும் அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், சிரியா தலைநகர் டமாஸ்கஸில் இஸ்ரேல் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. டமாஸ்கஸ் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் காரில் இருந்த ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி உள்பட 2 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. கொல்லப்பட்ட நபர் ஈரானில் இருந்து லெபனானுக்கு ஆயுதங்களை கடத்தி வரும் பிரிவின் தளபதியாக செயல்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருவது தொடர்பான ரகசிய ஆவணங்கள் வெளியாகி உள்ளன. ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது.
இதற்காக ராணுவ தளவாடங்களை இஸ்ரேல் நகர்த்தி வருவதாக அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணம் 5 கண்கள் எனப்படும் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் உளவு கூட்டமைப்பிடம் பகிரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆவணம் டெலிகிராம் சமூகவலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ரகசிய ஆவணம் வெளியான விவகாரம் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.