தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி, மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விடப்படுகிறது என்ற பொய்யை பரப்ப திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
தமிழகம் தனது பெருமையைத் தொலைத்து, எண் கணிதத்திலும், தாய்மொழி அறிவிலும் கடைசி இடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கல்வியை அரசியலாக்கி, கல்வியின் தரத்தை குறைத்து, தமிழக குழந்தைகளுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வியை கிடைக்காமல் செய்ததற்காக, முதலமைச்சர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இந்தக் கல்வியாண்டின் தொடக்கத்திலிருந்தே PMSHRI உட்பட சமக்ர சிக்ஷாவின் அனைத்து அம்சங்களையும் செயல்படுத்துவதாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசு உறுதியளித்ததை சுட்டிக்காட்டியுள்ள அண்ணாமலை, அதனை நிறைவேற்றினீர்களா என்றும், செயல்படுத்தப்படாத ஒரு திட்டத்திற்கு, மத்திய அரசு எவ்வாறு நிதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் சமக்ர சிக்ஷாவின் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு சமீபத்தில் வழங்கப்பட்ட நிதி அறிக்கையின்படி, 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இன்னும் 2024-25 ஆம் ஆண்டிற்கான நிதி விடுவிக்கப்படாததை சுட்டிக்காட்டியுள்ள அண்ணாமலை, அப்படி இருக்கையில், தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி, மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விடப்படுகிறது என்ற பொய்யை பரப்ப வெட்கமாக இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.