பாகிஸ்தானில் இருந்து பலூசிஸ்தான் சுதந்திரம் பெற்றதாக (Baloch Liberation Army) பலூச் விடுதலை ராணுவம் அறிவித்துள்ளது. தங்களைத் தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று இந்தியா மற்றும் ஐ.நா.விடம் கோரிக்கை வைத்துள்ள பலூச் விடுதலை ராணுவத்தினர், பாகிஸ்தானியர்கள் உடனடியாக பலூசிஸ்தானை விட்டு வெளியேறக் கெடு விதித்துள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, பலுசிஸ்தான் பாகிஸ்தானுடன் சேர விரும்பவில்லை. சுமார் 227 நாட்களுக்கு ஒரு சுதந்திர, இறையாண்மை பெற்ற நாடாக இருந்தது. தாங்கள் வலுக்கட்டாயமாகப் பாகிஸ்தானோடு சேர்க்கப்பட்டதாக பலூச் மக்கள் நம்புகிறார்கள். 1950-களில் தொடங்கிய பலூச் மக்களின் உரிமை போராட்டம் சமீப ஆண்டுகளில் மிகத் தீவிரமானது.
கடந்த மாதம் முதலே பலூச் விடுதலை ராணுவத்தின் தாக்குதல்கள் தீவிரமடைந்தன. ஹெரோஃப் 2.0 என்ற பெயரில், தனித் தனி ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 58 இடங்களில் மொத்தம் 78 நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. குறிப்பாக, ஓர்னா, பஞ்ச்கூர், கலாத், நோஷ்க்கி மற்றும் சிபி ஆகிய 7 இடங்களில்,தாக்குதல் நடத்திய பலூச் விடுதலை ராணுவத்தினர், பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
IED வெடிகுண்டுகள், லாஞ்சர்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறியுள்ள பலூச் விடுதலை ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் ஜியாந்த், பாகிஸ்தான் ராணுவ நிலைகளைத் தகர்த்து விட்டதாகவும், பலுசிஸ்தான் தலைநகராக உள்ள குவாட்டாவை கைப்பற்றி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பாகிஸ்தான் கொடிகள் வீழ்த்தப்பட்டு பலுசிஸ்தான் கொடிகள் ஏற்றப்பட்ட போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது.
இந்நிலையில், பலுசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் தனது கட்டுப்பாட்டை இழந்து வருவதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷாஹித் ககான் அப்பாசி கூறியிருக்கிறார். கடந்த மே மாதம் 9 ஆம் தேதி, பலூச் சுதந்திரம் பெறப் போவதாகவும், டெல்லியில் பலுசிஸ்தானின் அதிகாரப்பூர்வ அலுவலகம் மற்றும் தூதரகத்தைத் திறக்க அனுமதிக்க வேண்டுவதாகவும் தனது எக்ஸ் பக்கத்தில் சமூக செயற்பாட்டாளர் மிர் யார் பலோச் தெரிவித்திருந்தார்.
பலூசிஸ்தான் ஜனநாயகக் குடியரசின் சுதந்திரத்தை ஐநா அங்கீகரிக்கக் கோரிக்கை வைத்துள்ள மிர் யார் பலோச், அதற்காக, ஐ.நா.சபை கூட்டத்தையும் கூட்டுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், தனி நாணயம் மற்றும் பலூசிஸ்தான் பாஸ்போர்ட் அச்சிடுவதற்கு பில்லியன் கணக்கான நிதி விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து, இந்தியா மற்றும் பலூசிஸ்தான் நட்பைச் சித்தரிக்கும் பதாகைகளுடன் பலூச் மக்கள் நிற்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்ட மிர் யார் பலூச், பலூசிஸ்தான் ஜனநாயகக் குடியரசின் மக்கள் பாரத மக்களுக்கு தங்கள் முழு ஆதரவைக் காட்ட வருகிறார்கள் என்றும், சீனா பாகிஸ்தானுக்கு உதவும் நிலையில், பலூசிஸ்தான் மக்கள் பாரதத்தின் அரசாங்கமாக இருக்கும் என்றும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு பாகிஸ்தானை வெளியேற்றும் இந்தியாவின் முடிவை முழுமையாக ஆதரிப்பதாகக் கூறியுள்ள மிர் யார் பலூச், இந்தியாவுடனான போரில் மீண்டும் மீண்டும் சரணடையாமல் உடனடியாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை விட்டு பாகிஸ்தான் வெளியேறச் சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
பலூசிஸ்தானின் மொத்த கட்டுப்பாடும் பலூச் விடுதலை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், சர்வதேச ஊடகங்களில், பாகிஸ்தான் இராணுவ நிலைகள் மீது பலூச் விடுதலை இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாக மட்டுமே செய்திகள் வெளியிட்டுள்ளன.