மயிலாடுதுறை தருமபுர ஆதீன மடத்தில் பட்டணப்பிரவேச விழா கோலாகலமாக நடைபெற்றது.
மயிலாடுதுறையில் உள்ள தருமபுர ஆதீன திருமடத்தில் கடந்த 9ஆம் தேதி பட்டிணப்பிரவேச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் திருமடத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தருமபுர ஆதீன மடாதிபதி, சிவிகை பல்லக்கில் அமர வைக்கப்பட்டு பக்தர்கள் சுமந்து செல்லும் பட்டணப்பிரவேச விழா இரவு கோலாகலமாக நடைபெற்றது.
தருமபுர ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், திருக்கூட்ட அடியவர்கள் புடைசூழ சிவிகை பல்லக்கில் அமர்ந்தார். தொடர்ந்து, சிவிகை பல்லக்கினை 70 பேர் தோளில் சுமந்து தூக்கி சென்றனர். அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள் உள்ளிட்ட பரிவாரங்களுடன் வாணவேடிக்கை முழங்க ஆரவாரத்துடன் சிவனடியார்கள், பக்தர்கள் புடைசூழ தருமபுரம் ஆதீனம் வீதியுலா சென்றார்.
நான்கு வீதிகளில் பூரணகும்ப மரியாதையுடன் ஆதீன மடாதிபதிக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்து தீபாராதனை செய்து வழிபாடு நடத்தினர். பக்தர்களுக்கு குருமகா சன்னிதானம் ஆசி வழங்கி திருநீரு பிரசாதம் வழங்கினார். இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட நிலையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.