கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு வரும் நீர்வரத்து ஆயிரத்து 648 கன அடியிலிருந்து 5 ஆயிரத்து 205 கன அடியாக அதிகரித்துள்ளது.
தொடர் மழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 118.10 அடியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 100 கன அடி திறக்கப்பட்டுள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 2 ஆயிரத்து 285 மில்லியன் கன அடியாக உள்ளது.
அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.