கத்தார் தலைநகர் தோஹாவில் புலம் பெயர்ந்த இந்தியர்கள் உடனான உரையாடலின்போது பேசிய காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி, பல்வேறு மதங்கள், சமூகங்கள், மொழிகள் ஆகியவற்றின் அற்புதக் கலவை இந்தியா என்று குறிப்பிட்டார்.
அமைதியாக வாழவும், அண்டை நாடுகளுடன் ஒருங்கிணைந்து முன்னேறவும் இந்தியா முயன்று வருவதாகக் கூறிய அவர், ஆனால் அண்டை நாடான பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருவதாகக் குற்றஞ்சாட்டினார்.
இந்த விவகாரத்தில் இந்தியா மிகுந்த பொறுமையுடனும் சகிப்புத்தன்மையுடனும் நடந்து கொண்டதாகக் கூறிய அவர், பயங்கரவாதத்திற்கு மதம் இல்லை என்றும், பயங்கரவாதம் ஒரு அருவருப்பான புற்றுநோய் எனவும் கூறினார். எனவே பயங்கரவாதத்தை அழிக்க வேண்டும் என்ற செய்தியை முழு உலகிற்கும் எடுத்துச் செல்வதாகவும் மணீஷ் திவாரி தெரிவித்தார்.
இதேபோல் தோகாவில் பேசிய காங்கிரஸ் எம்பி ஆனந்த் சர்மா, பஹல்காம் தாக்குதலுக்கு முன்பும் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளதாகக் கூறினார். இந்தியா முதிர்ச்சியுடனும் நிதானத்துடனும் செயல்பட்டு வருவதாகக் கூறிய அவர், வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் பலம் என்று குறிப்பிட்டார். பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகளின் ஆதரவைப் பெறுவதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.