ஆம்னி பேருந்துகளுக்கான பயணக் கட்டண உயர்வு குறித்து பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்து துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கட்டண உயர்வு கோரி தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு வழக்கு தொடர்ந்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டீசல் மற்றும் உதிரி பாகங்களின் விலை உயர்விற்கு ஏற்ப ஆண்டுதோறும் கட்டண உயர்வு வழங்கிட குறியீட்டுமுறை வேண்டுமென தனியார் பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளதாகவும், ஆம்னி பேருந்துகளுக்கான கட்டண உயர்வு குறித்து அனைத்து நுகர்வோர் அமைப்பினர் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களை கேட்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், அறிவிப்பு கிடைத்த மூன்று வார காலத்திற்குள் கருத்துகளை அனுப்பி வைக்க வேண்டும் என போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது.