கோடிக்கணக்கான இந்திய மக்களின் சார்பில் பாகிஸ்தானுக்கு ஆப்ரேஷன் சிந்தூர் மூலமாகத் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதிக்குச் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாகிஸ்தானின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ஜம்மு காஷ்மீர் அரசும், மத்திய அரசும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்போதும் துணை நிற்கும் என தெரிவித்தார்.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், மே 7-ம் தேதி இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகக் கூறிய அவர், கோடிக்கணக்கான இந்திய மக்களின் சார்பில் பாகிஸ்தானுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமித்ஷா, பயங்கரவாதிகளுக்குப் பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்ததை உலகம் அறிந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.