அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் இன்று தண்டனை விவரங்களை அறிவிக்கிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி ஞானசேகரன் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு எதிரான வழக்கை மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து பிப்ரவரி மாதம் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
பின்னர் அந்த குற்றப்பத்திரிக்கை சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி விசாரித்தார்.
வழக்கில், ஞானசேகரனுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை பதிவு செய்த நீதிபதி, கடந்த ஏப்ரல் மாதம் முதல் சாட்சிகள் விசாரணையை துவங்கினார்.
29 அரசு தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, அனைத்து விசாரணையும் முடிவடைந்ததை அடுத்து, கடந்த 28 ம் தேதி, ஞானசேகரனுக்கு எதிராக 11 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவரை குற்றவாளி என நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பளித்தார்.
இந்நிலையில்,மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளி ஞானசேகரனுக்கு இன்று தண்டனை அறிவிக்கப்படுகிறது.