கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடுக்கடலில் தீ விபத்திற்குள்ளான கப்பலிலிருந்து 18 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து கடந்த 7-ம் தேதி புறப்பட்ட சரக்கு கப்பல், மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. கேரளாவின் பேய்பூர் கடல் பகுதியில் சென்றபோது கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடற்படையினரும், கடலோர காவல் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
விபத்திற்குள்ளான கப்பலில் சீனா, தைவான், மியான்மர் மற்றும் இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த 22 பணியாளர்கள் இருந்தனர்.
அவர்களில் 18 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு, முதலுதவி அளிக்கப்பட்டதாக இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது.
மேலும், காணாமல் போன 4 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கப்பலில் இருந்த கொள்கலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது, விசாரணையில் தெரியவந்துள்ளது.