திருப்பூரில் மாநகராட்சி ஊழியர்களை காலை 7 மணிக்கே வரிவசூலில் ஈடுபட வேண்டும் எனவும், நாள் ஒன்றுக்கு 2 கோடி ரூபாய் வரை வரி வசூல் செய்ய வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையர் பேசும் ஆடியோ வைரலாகி வருகிறது.
60 வார்டுகளுடன் செயல்படும் திருப்பூர் மாநகராட்சியில் பொறுப்பு ஆணையராக மகேஸ்வரி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மாநகராட்சி ஊழியர்களை காலை ஏழு மணிக்கே பணிக்கு வந்து விட வேண்டும் எனவும், காலை 7 மணிக்கே வரி வசூலைத் தொடங்கிவிட வேண்டுமென்றும் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது.
மேலும் அதில் நாள் ஒன்றுக்கு இரண்டு கோடி ரூபாய் அளவில் வரி வசூலைக் கட்டாயம் செய்து விட வேண்டும் எனவும் பொறுப்பு ஆணையர் மகேஸ்வரி பேசியுள்ளார்.
இது தொடர்பான ஆடியோ வெளியாகிப் பரவி வரும் நிலையில் திருப்பூர் மாநகராட்சியில் ஏற்கனவே பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதாகவும் ஆணையர் மகேஸ்வரியின் பேசியது மேலும் பணிச்சுமையை ஏற்படுத்துகிறது என்று மாநகராட்சி ஊழியர்கள் குமுறுகின்றனர்.