மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த முதியவருக்கு ஈமச்சடங்கு செய்ய உறவினர்கள் குவிந்ததால் மருத்துவமனை நிர்வாகம் உடலை ஒப்படைத்தது.
விருதுநகரைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் இதய நோய் சிகிச்சைக்காகக் கடந்த 12ஆம் தேதி மதுரை காளவாசல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது, சிகிச்சைக்காக 4 லட்சம் ரூபாய் பணம் கட்ட வேண்டும் என மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது. 2 லட்சம் ரூபாய் பணம் கட்டப்பட்ட நிலையில், 13ஆம் தேதியே அண்ணாதுரை இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
மீதமுள்ள தொகையைக் கட்டினால் மட்டுமே இறந்தவரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்போம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் இறுதிச்சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவரின் உறவினர்களுடன் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து மருத்துவனை நிர்வாகம் அண்ணாதுரையின் உடலை ஒப்படைத்தது. உறவினர்கள் ஒப்பாரி வைத்து ஈமச்சடங்கு பணியில் ஈடுபட்டதால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.