மதுரை மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டி காவல்நிலையம் ரவுடி கும்பலால் அடித்து நொறுக்கப்பட்ட நிலையில் அங்கு ஆய்வு மேற்கொள்ளச் சென்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
மதுரையில் கொலைக் குற்றவாளி என கூறப்படும் பிரபாகரன் என்பவரிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் அவரின் வீட்டிற்கு சென்றனர்.
அப்போது அவர் அங்கு இல்லாததால் பிரபாகரின் தந்தையை போலீசார் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த ரவுடி பிரபாகரன் சத்திரப்பட்டி காவல்நிலையத்திற்குள் நள்ளிரவு நேரத்தில் தனது ஆதரவாளர்களுடன் நுழைந்தார்.
அங்கு பணியில் இருந்த காவலரைத் தாக்கியும், காவல்நிலையத்தை அடித்து நொறுக்கிவிட்டும் தப்பி சென்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில் சத்திரப்பட்டி காவல்நிலையத்தைப் பார்வையிடுவதற்காக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தனது ஆதரவாளர்களுடன் சென்றார்.
அப்போது அவரை இடைமறித்த போலீசார் உங்களுக்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஆர்.பி.உதயகுமார் காரில் இருந்து இறங்கி நடந்தபடியே காவல்நிலையத்திற்குள் செல்ல முயன்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போலீசார் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அவரின் ஆதரவாளர்களைக் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.