பாபநாசம் அருகே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட முயன்ற விவசாயிகளை போலீசார் குண்டு கட்டாகக் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே திருமங்கலக்குடி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதல் செய்ததற்கான நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.
இது குறித்து பலமுறை அமைச்சர் உள்ளிட்டோரிடம் மனு அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தஞ்சையில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சரை சந்திக்க கரும்பு விவசாயிகள் அனுமதி கேட்டு உள்ளனர்.
ஆனால், அனுமதி வழங்கப்படாததைக் கண்டித்து எம்எல்ஏ துரை சந்திரசேகரன் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக பாபநாசம் வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராகக் கரும்பு விவசாயிகள் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது, அங்குக் காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், விவசாயிகளைக் குண்டு கட்டாகக் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.