ஏற்காடு விரைவு ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் இரும்பு ராடு வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டில் இருந்து நாள்தோறும் இரவு 9 மணிக்கு புறப்படும் ஏற்காடு விரைவு ரயில், சேலம் வழியாக அதிகாலை 3.40 மணிக்கு சென்னை சென்றடையும்.
அதன்படி, இரவு 9 மணிக்கு ஈரோட்டில் இருந்த புறப்பட்ட ஏற்காடு விரைவு ரயில், மகுடஞ்சாவடி அருகே வந்தபோது ரயில் இன்ஜின் சக்கரத்தில் மர்ம பொருள் சிக்கியதை அறிந்த லோகோ பைலட் ரயிலை உடனடியாக நிறுத்தினார்.
பின்னர், கீழே இறங்கி பார்த்தபோது தண்டவாளத்தில் பெரிய அளவிலான இரும்பு ராடு, ரயில் இன்ஜின் சக்கரத்தில் சிக்கியது தெரிய வந்தது. இது குறித்து தகவலறிந்த சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள், ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், ஏற்காடு விரைவு ரயிலை கவிழ்க்கும் நோக்கத்துடன் 10 அடி நீளம் உள்ள உடைந்த தண்டவாளத்துண்டை குறுக்கே வைத்திருந்தது உறுதியானது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்தில் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், சேலத்தில் இருந்து மாற்று ரயில் இன்ஜின் பொருத்தப்பட்டு இரவு 11 மணிக்கு ஏற்காடு விரைவு ரயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.