பால்வளத்துறை முறைகேடு புகாரில் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கான பதிவேடுகள் கொள்முதல் செய்ததில் ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்படுத்திய விவகாரத்தில் பால்வளத்துறை ஆணையர் கிறிஸ்துதாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து, ஓய்வுபெற அனுமதி அளிக்க உத்தரவிடக்கோரி, உயர்நீதிமன்ற கிளையில் கிறிஸ்துதாஸ் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பி.புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, பால் கூட்டுறவு சங்கங்களுக்கு பதிவேடுகளை வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது என்றும், இந்த வழக்கில் ஐஏஎஸ் அதிகாரிகள் காமராஜ், வள்ளலார் ஆகியோருக்கு எதிராக பொதுத்துறையில் ஒரு தனி நடவடிக்கை தொடங்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.
ஊழல் செய்த அமைச்சர்கள் மீது வழக்கு பதியப்படும்போது தவறு செய்த ஐஏஎஸ் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கருத்து தெரிவித்தார்.
குற்றச்சாட்டிற்கான முகாந்திரம் இருப்பதால் ஐஏஎஸ் அதிகாரிகள் காமராஜ், வள்ளலார் மற்றும் மனுதாரர் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி,
அடுத்தகட்ட மேல் நடவடிக்கையை சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் மேற்கொள்ள வேண்டும் என ஆணையிட்டார்.
மேலும், பால் கொள்முதல் முறைகேடு விவகாரத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் விடுவிக்கப்பட்ட விதம் குறித்து விசாரித்து, உரிய நடவடிக்கையை மத்திய அரசின் ஊழல் கண்காணிப்பு ஆணையர் மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.