சீனாவின் (Qingdao) கிங்டாவோவில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டத்தில் பங்கேற்கும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 2020ம் ஆண்டு கிழக்கு லடாக்கில் ஏற்பட்ட எல்லை மோதலுக்குப் பிறகு, இந்திய பாதுகாப்பு அமைச்சரின் முதல் சீன பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அது பற்றிய விரிவான தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவும் சீனாவும் சுமார் 3500 கிலோமீட்டர் வரையறுக்கப்படாத எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. சீனா-இந்தியா இரு நாட்டுக்கும் ராணுவ ரீதியாக முக்கிய பகுதியாக கல்வான் பள்ளத் தாக்கு உருவெடுத்துள்ளது. இந்தியாவின் கிழக்கு லடாக்குக்கும், சீனாவின் அக்சாய் சின் பகுதிக்கும் இடையில் கல்வான் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. இந்த பள்ளத் தாக்கு வழியாகப் பாயும் கல்வான் நதி, சீனாவின் அக்சாய் சின் பகுதி நடைமுறை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே உற்பத்தியாகி கிழக்கு லடாக் நோக்கிச் சென்று, உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு அருகே இந்தியப் பகுதியில் உள்ள ஷியோக் நதியில் இணைகிறது.
கடந்த காலங்களில், சீன வீரர்கள் இந்த பகுதி வரை ரோந்து சென்றுவந்த நிலையில், இப்போது கல்வான் பள்ளத்தாக்கு முழுவதுமே தனக்குச் சொந்தமானது என்று சீனா கூறுகிறது. சீனாவின் இந்த உரிமை கோரலை இந்தியா திட்டவட்டமாக மறுக்கிறது. ஏற்கெனவே உண்மையான கட்டுப்பாட்டு கோடு அருகே சீனாவும் மிகப்பெரிய அளவில் உள்கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஒரு இராணுவ கட்டுப்பாட்டுத் தளத்தையும் சீனா இப்பகுதியில் கட்டி வருகிறது.
இந்த சூழலில், கிழக்கு லடாக்கில் உள்ள தர்புக் பகுதியிலிருந்து ஷியோக் வழியாக தவுலத் பெக் ஓல்டி(டிபிஓ ) வரை 255 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்தியா சாலை அமைக்கிறது. லே பகுதியிலிருந்து இந்தப்பகுதிக்குச் செல்ல 2 நாட்கள் ஆகும் நிலையில், இச்சாலை வசதி நிறைவடைந்தால் வெறும் 6 மணி நேரத்தில் டிபிஓ சென்று விடமுடியும்.
குறிப்பாக, இந்த சாலை மூலம், காரகோரம் கணவாய் சென்றடைய முடியும். அங்கிருந்து, சீனாவின் ஜி219 நெடுஞ்சாலையையும், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்துக்காக அமைக்கப்பட்டு வரும் சாலையையும் அடைய முடியும். இதை விரும்பாத சீனா, கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், 2020ம் ஆண்டு, ஏப்ரல் மாதத்தில், இந்தியாவின் லடாக்கில் ஐந்து இடங்களில் 5,000 க்கும் மேற்பட்ட சீன இராணுவ வீரர்கள் ஊடுருவினார்கள். ஐந்து வாரங்களாக, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருநாட்டு இராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில், 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அதிகபட்சமாக 41 சீன வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.1975 க்குப் பிறகு, இந்தியா-சீனா எல்லையில் உயிரிழப்புகள் ஏற்பட்ட முதல் வன்முறைச் சம்பவம் இதுவாகும். ஆசியாவின் இருபெரும் நாடுகளுக்கு இடையேயான இந்த மோதல் சர்வதேச கவனத்தைப் பெற்றது.
கடந்த 2020-ம் ஆண்டு மே மாதத்தில், இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் அத்துமீறியதை அடுத்து, கிழக்கு லடாக் எல்லையில் சுமார் 50,000 ராணுவ வீரர்களைப் பாதுகாப்புப் பணியில் இருநாடுகளும் ஈடுபடுத்தியுள்ளன. இரு தரப்பும் போருக்குத் தயார் நிலையில் இருக்கும் சூழ்நிலையில், பல சுற்று ராணுவ மற்றும் இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் 21ம் தேதி, கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) ரோந்து செல்வது தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே சுமூகமான ஒப்பந்தம் ஏற்பட்டது. மேலும், இந்தியா- சீனா இடையே நேரடி விமானச் சேவை, கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்கு அனுமதி, எல்லையில் உள்ள நதிகளின் நீரைப் பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இருநாடுகளும் ஒப்பந்தத்தை எட்டின.
கடந்த நவம்பரில் லாவோஸில் நடந்த ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில், சீனப் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் டோங் ஜுனைச் சந்தித்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைக்கோட்டு ராணுவ பதற்றத்தைத் தணிப்பதற்கான முயற்சிகளை மதிப்பாய்வு செய்தார்.
பிரேசிலில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் போது மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியை சந்தித்த இரண்டு நாட்களுக்குப் பின் இந்த சந்திப்பு நடந்தது. முன்னதாக, ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த நிலையில், கிழக்கு லடாக்கில் உள்ள (LAC) எல்.ஏ.சி.யில் இராணுவத் துருப்புகளின் ரோந்து குறித்த ஒப்பந்தத்தை இருநாட்டுத் தலைவர்களும் வரவேற்றனர்.
சமீப ஆண்டுகளாக, சீனா-பாகிஸ்தான் பாதுகாப்பு உறவுகள் மேம்பட்டுள்ளன. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கிய நேரத்தில், பாகிஸ்தானுக்குச் சீனா அதிநவீன போர் விமானங்களையும் ஆயுதங்களையும் வழங்கியது.
ரஷ்யா- உக்ரைன் போர், இஸ்ரேல்- ஈரான் போர், அமெரிக்கா- சீனா வர்த்தக போர் என புவிசார் அரசியல் கொந்தளிப்பில் உள்ளது. இதில் யூரேசிய பாதுகாப்பில் தன்னை ஒரு மாபெரும் சக்தியாக உலக அளவில் சித்தரிக்கச் சீனா முயற்சி செய்கிறது. அமெரிக்கா மற்றும் குவாட் நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்துதல், ரஷ்யாவுடனான எரிசக்தி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பைப் பேணுதல் என இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அணிசேரா அணுகுமுறையிலிருந்து மாறுபட்டு அணிசேரும் அணுகுமுறையாக மாறியுள்ளது.
ஏற்கெனவே, எல்லையில் அமைதி மற்றும் சமாதானம் நிலவினால் மட்டுமே இந்தியா-சீனா உறவை மேம்படுத்த முடியும் என்றும், முந்தைய இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் உறுதிப்பாடுகளின்படி சீன எல்லையில் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும் என்றும் ராஜ்நாத் சிங் தெளிவு படுத்தி இருந்தார்.
மேலும், எல்லையில் சீன ராணுவம் குவித்துள்ள ராணுவத் துருப்புகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், தவுலத் பெக் ஒல்டி அருகே உள்ள ராணுவ நிலைகளைச் சீனா நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்றும் கூறிய ராஜ்நாத் சிங், அப்படிச் செய்யவில்லை என்றால் இருதரப்பு சுமுக உறவுக்கு வாய்ப்பில்லை என்றும் உறுதியாகக் கூறியிருந்தார்.
இந்தப் பின்னணியில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்துக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சரைச் சீனா அழைத்துள்ளது. இந்தியா எச்சரிக்கையான அணுகுமுறையைச் சீனாவுடன் கடைப்பிடித்து வரும் நிலையில், சீனா முழு அளவிலான உறவுகளை விரைவாக மீட்டெடுப்பதில் ஆர்வமாக உள்ளது என்பதையே காட்டுகிறது.
இந்த ஆண்டு இறுதியில், (Tianjin) தியான்ஜினில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டுக்குப் பிரதமர் மோடி அழைக்கப்பட்டிருந்தாலும், அவரின் பங்கேற்பு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பட்சத்தில் சீன- இந்திய உறவு மேலும் பலம் பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.