2026 தேர்தலில் திமுகவை விரட்டியடித்து, தமிழகம் இழந்த அமைதி, வளர்ச்சி, மாநில உரிமையை மீட்டுத் தருவேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், நான்காண்டுகள் ஆட்சியில் மக்களுக்கு ஒன்றுமே செய்யாத முதலமைச்சர், போட்டோஷூட் மேடை போட்டு, அரசு விழா என்ற பெயரில் அரசியல் பேசுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அண்ணாதுரை பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கும், திமுக-வுக்கும் கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பிய இபிஎஸ், அண்ணாவின் கொள்கைகளுக்கு மாறாக, குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டு, கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்டிருப்பதாக திமுகவை விமர்சித்துள்ளார்.
தங்களுக்கு ஈவெரா, அண்ணா பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்த இபிஎஸ், கச்சத்தீவு முதல் காவிரி வரை தமிழ்நாட்டை, அதன் உரிமைகளை அடகு வைத்ததும், வைக்கத் துணிவதும் திமுக தான் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக-வால் பறிபோன தமிழ்நாட்டின் அமைதி, வளம், வளர்ச்சி, மாநில உரிமை என அனைத்தையும் மீட்டுத் தருவதாக உறுதியளித்த இபிஎஸ், இதுவே, தமிழ்நாட்டு மக்களுக்கு தான் அளிக்கும் 2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதி என்று எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.